தடுப்பூசி ஆய்வு முடிவை நம்பலாமா?
சந்தேகத்தை கிளப்பும் சில ஆதாரங்கள்! தடுப்பூசி குறித்த திடுக்கிடும் தகவல்களை தொடர்ந்து நமது இதழில் வெளியிட்டு வருகிறோம். சமீபத்தில் தடுப்பூசி போடப் பட்ட குழந்தைகள் இறந்த காரணம் அறிய தடுப்பூசியானது ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
பிரேதப் பரிசோதனையோ ஒவ்வாமை தான் காரணம் என்று அறிவித்துள்ளது. தடுப்பூசியை ஆய்வு செய்த கசாலி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட ஆய்வு முடிவில் தடுப்பூசி காரணமாகவோ அல்லது தடுப்பூசியால் ஏற்பட வாய்ப்புள்ள கலப்படம் காரணமாகவோ உயிரிழப்பு ஏற்படவில்லை.
மேலும் திருவள்ளூரில் நடந்த சம்பவத்திற்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று அறிவித்துள்ளது. இது பற்றி டாக்டர் வீ. புகழேந்தி M.B.B.S., கூறும் போது...
இந்த ஆய்வு முடிவு உண்மைதானா? இந்த ஆய்வு முடிவை எந்த அளவிற்கு நம்பலாம்? என்று ஆராய்ந்து பார்க்கும் போது சில சந்தேகங்களும் எழும்பத்தான் செய்கிறது. அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஏன் சந்தேகம்?
தடுப்பூசியில் உலோகக் கலப்படம் உள்ளதா, இல்லையா என்பதை துல்லியமாக கண்டறிய ஸ்பெக்ட்ரோஸ் கோபி என்னும் கருவி பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அத்தகைய கருவி ‘கசாலி’ ஆய்வகத்தில் இல்லை என்பது 16-05-08 அன்று தினத்தந்தியில் செய்தியாக உள்ளது.
பிறக்கலப்படங்களை அறிய ‘Liquid Gas Chromotography’ என்னும் மெத்தட் மூலம் அறிந்து கொள்ளலாம். அப்படியிருக்க தடுப்பூசியில் கலப்படம் இல்லை என்பதை எந்த ஆய்வை வைத்து உறுதி செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதுபற்றி விளக்கம் அளிக்கப்பட வில்லை.
மேலும், கசாலி ஆய்வகத்தில் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் பிரிவில் குறைபாடுகள் இருப்பதாலும், GMP எனப்படும் Good Manufacturing Practice இல்லை என்பதாலும் தற்காலிகமாக லைசன்ஸ் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அந்த தடுப்பூசியை தயாரித்த ஹியூமன் பயாலஜிக்கல் இன்ஸ்டிடி யூட்டை ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அதில், திருவள்ளூரில் கொடுக்கப்பட்ட தட்டம்மை தடுப்பூசியில் கலப்படம் ஏதுமில்லை என்று உறுதி செய்தாலும் கூட அந்நிறுவனத்தை (ஹியூமன் பயாலஜிகல் இன்ஸ்ட்டிடியூட்) ஆய்வு செய்து பார்க்கும்போது கலப்படம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதாவது அந்நிறுவனத்தின் விலங்குகள் பரிசோதனைக் கூடத்தை ஆய்வு செய்தபோது அதில் சில குறைபாடுகள் காணப்பட்டன. குறிப்பிட்ட ஒரு பேட்சில் உற்பத்தி செய்யப்பட்டதில் மூன்றாயிரம் மருந்துகளில் சில குறைபாடுகள் காணப்பட்டன. (1. ஊசி மருந்தின் மூடி சரியாக மூடப்படவில்லை. 2. மூடியில் பள்ளம் விழுந்து காணப்பட்டது) அதனால் அந்த மூன்றாயிரம் ஊசி மருந்துகளையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது என்று நிபுணர்க் குழு தனது அறிக்கையில் திட்டவட்டமாக சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும் ஹியூமன் பயாலஜிக்கல் நிறுவனத்தில் 30,000 தடுப்பூசி மருந்துகளே தயாரிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி 60,000 மருந்துகளை உற்பத்தி செய்துள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல். இப்படியெல்லாம் இருக்க, குழந்தைகளின் இறப்புக்கு மனித தவறுகள் காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளது என்பதை எப்படி முழுமையாக நம்ப முடியும்? தடுப்பூசி செலுத்தப் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் துருப்பிடித்திருந்ததாகவும் சில சிரிஞ்சிகளில் தூசி படிந்திருந்ததாகவும் அரசு தரப்பில் காரணம் வெளியிடப்பட்டுள்ளது. இது திருச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட காரணங்கள்.
மத்திய சுகாதரத்துறை அமைச்சர் அன்புமணியோ துருப்பிடித்த ஊசியோ, சிரிஞ்சியில் படிந்த தூசியோ காரணமாக இருக்காது. அந்த இறப்புக்கு காரணம் இன்னும் ஆய்வில்தான் உள்ளது என்றும் கூறியிருப்பது 18-05-09 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தியாக வந்துள்ளது. இந்த குழப்பமான சூழலில் திருவள்ளூரிலும் இந்த மாதிரி துருப்பிடித்த, தூசிபடிந்த ஊசிகள் தான் பயன்படுத்தப்பட்டதா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் தூசி அல்லது துருப் பிடித்ததன் காரணமாகத்தான் நான்கு குழந்தைகள் இறப்பதற்கான (திருவள்ளூரிலேயே இரண்டு இடத்தில் குழந்தைகள் இறந்தது) காரணங்கள் என்பது மிகமிக அபூர்வம். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசிகளின் இறப்புக்கும் அதே காரணம்தானா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
GMP இல்லாத கசாலி இன்ஸ்ட்டியூட், பி.சி.ஜி யூனிட் - கிண்டி பாஸ்டியர் இன்ஸ்ட்டியூட் - குன்னூர் ஆகிய மூன்று ஆய்வகங்களின் லைசன்ûஸயும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு. ஆக, தட்டம்மை தடுப்பூசியை தரமாக உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படாதது ஏன்? தடுப்பூசியை துல்லியமாக ஆராய்ந்து அறியும் முறைகள் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யப்படாதது ஏன்? எதை வைத்து ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது? என பல சந்தேகங்களும் கேள்விகளும் எழும்புகிறது. ஆக, குழந்தைகள் இறப்புக்கு காரணம் என்ன என்ற ஆய்வு முடிவை முறையான ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தால் தான் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியும். அதை அரசு செய்ய வேண்டும்.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சப் கமிட்டியின் வைஸ் சேர்மன் டாக்டர் ஜேக்கப் புலியெல் கூறும்போது மத்திய அரசு போலியோ தடுப்புக்காக செலவு செய்தது. இருப்பினும் அந்த வருடம் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததன் விளைவாக 1600 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டது பதிவாகியுள் ளது. மேலும், 27000 பேர் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் அந்த 27,000 பேருக்கும் போலியோ பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வுகளைச் செய்யவில்லை. மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுத்தும்கூட பலருக்கு பாதுகாப்பு அளிக்காமல் போனது. இந்தச்சூழலில் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசு இன்ஜக்டபுள் போலியோ வேக்சின் கொடுக்கும் திட்டத்தை அறிவித்தது. அதுவும் சரியான முடிவு அல்ல என்கிற டாக்டர் ஜேக்கப்புலியெல் சில ஆலோசனைகளையும் வழங்குகிறார். இன்ஜக்டபுள் போலியோ வேக்ஸின் என்பது சொட்டுமருந்தை விட 25 மடங்கு விலை அதிகம். அப்படி இன்ஜக்டபுள் போலியோ வேக்ஸினுக்கு செய்யும் செலவை, பாதுகாக்கப்பட்ட குடிநீரை அனைவருக்கும் வழங்குவது சரியான முடிவாக இருக்கும். அதுவே நீடித்த நிலைத்த போலியோ நோய்த் தடுப்பாக அமையும். மேலும், போலியோவை தவிர தண்ணீரால் பரவும் மஞ்சள் காமாலை - காலரா, டைஃபாய்டு, அமீபியாஸிஸ் போன்ற வியாதிகளையும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மூலம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
மேலும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் க்ளினிக்கல் எக்ஸலன்ஸ் (NICE) என்னும் அரசு சாரா நிறுவனம் இங்கிலாந்தில் தன்னிச்சையான அதிகாரத்துடன் செயல்படு வது போல நம் நாட்டிலும் ஒரு நிறுவனம் உருவாக்கலாம். NICE குழுவில் இருப்பது போல மருத்துவ நிபுணர்கள், தடுப்பூசி சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள், நோய்த்தடுப்பு நிபுணர் குழு, சமூக ஆர்வலர் கள் மக்கள் ஆகியோர் கொண்ட குழுவாக இணைந்து தடுப்பூசி பற்றி ஆய்வு செய்து பரிசீலித்து சொல்லும் முடிவை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் வெளிவரும் மக்களுக்கும் தடுப்பூசி பற்றிய முழுமையான விழிப்புணர்வு ஏற்பட்டு தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்கிறார். அப்படிப்பட்ட ஒரு அரசு சாரா நிறுவனம் அல்லது முழுமையான ஆராய்ச்சிதான் மண்ணில் மடிந்து போன மழலைகளின் உயிருக்கு காரணம் கண்டுபிடிக்கும் என்று வேதனையோடு கூறுகிறார் டாக்டர். வீ. புகழேந்தி
குமுதல் ஹெல்த் 1-15ஜூன், 2008
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|